தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலு முன்னர் தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து விலகிய திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டது. இவர் சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுகிறது.
இந்த நிலையில் திமுகவில் இருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “கழகத்தில் என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்பதை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதைக்கு வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை, முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதைக்கு வேறு கட்சியில் இணையும் மனநிலையில் இல்லை என தெரிவித்துள்ளார்.




