திருப்பூரில் புதிய கிரிக்கெட் பயிற்சி மையம் – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைத்தார்!

கிரிக்கெட்டில் முன்பு இல்லாத வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட்டை விரும்பும் விளையாட்டு வீரர்கள் அதனை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என திருப்பூரில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மையத்தை துவங்கி வைத்த தமிழகத்தைச் சேர்ந்த…

கிரிக்கெட்டில் முன்பு இல்லாத வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால்
கிரிக்கெட்டை விரும்பும் விளையாட்டு வீரர்கள் அதனை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என திருப்பூரில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மையத்தை துவங்கி வைத்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார். 

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது பயிற்சி
மையத்தின் புதிய வலை பயிற்சி அரங்கை இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச்
சேர்ந்த நடராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவியோடு திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் இணைந்து உருவாக்கிய இந்த வலைப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு தனது
கையெழுத்திட்டும் , செல்ஃபி புகைப்படம் எடுத்தும் வீரர்களை
உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன் தமிழகத்தின் முன்பு இல்லாத அளவிற்கு தற்போது வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு தன்னைப் போன்ற கிராமப்புற பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வர வேண்டும் எனவும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு
மாவட்டத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் தேர்வாக வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் கூறினார்.

மேலும் 20 ஓவர் போட்டி , டெஸ்ட் கிரிக்கெட் என பிரித்துப் பார்க்க
முடியாது ஒவ்வொன்றும் தனித்துவமானது எப்பொழுதும் டெஸ்ட் போட்டியில் தான்
திறமையை நிரூபிக்க முடியும். நான் கிரிக்கெட்டில் வந்த காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை தற்பொழுது வாய்ப்புகள் அதிக அளவில்
உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் , டிஎன்பிஎல் போன்ற விளையாட்டுகள் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. டிஎன்பிஎல் மூலமாக 13 பேர் ஐபிஎல் போட்டியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ளனர். வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவிச் செயலாளர் பாபா , தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.