ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு அறிவிக்க இது ஒரு சிறந்த நேரம் என்றும், ஆனால் இன்னும் ஒரு சீசன் விளையாட வேண்டும் என்பது போல உள்ளது என்றும் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில், இரவு 11 மணி வரை மழை பெய்ததால், நேற்றைக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அறிவித்தபடி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில்லும் ரித்திமான் சாஹாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். சுப்மன் கில் 7 பவுண்டரிகளை பறக்க விட்டு 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் கூல் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து ரித்திமான் சாஹா அரை சதம் கடந்த நிலையில் 54 ரன்களில் தீபக் சாஹரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாய் சுதர்சன் ஜோடி அதிரடி காட்டியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து 200 ரன்களை கடந்தது. இதையடுத்து சாய் சுதர்சன் 96 ரன்களில் பத்திரனாவின் பந்துவீச்சில் LBW அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. பத்திரனா கடைசி ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கெய்க்வாடும் , கான்வேயும் களமிறங்கினர். மூன்றாவது பந்தில் கெய்க்வாட் பவுண்ட்ரி அடித்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டது.
மழை நின்றபின் 12:10 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. 15 ஓவார்களாக இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆட்டத்தை தொடங்கிய கெய்க்வாடும், கான்வேயும் அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை அதிகரித்தனர். 26 ரன்னில் கெய்கவாட் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து கான்வேயும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே, சிவம் தூபே ஜோடி ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறையாமல் விளையாடிய நிலையில் ரஹானே ஆட்டமிழந்து சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்ட்ரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டார். அதன் பின்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனியும் டக் அவுட் ஆகி சென்னை அணி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தந்தார்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் தர களமிறங்கிய ஜடேஜா பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆடினார். கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஒரு சிக்ஸ் மற்று ஒரு பவுண்ட்ரி விளாசி சிஎஸ்கே அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை அணியின் இந்த வெற்றிக்குப் பின்னர் பேட்டியளித்த கேப்டன் எம்.எஸ்.தோனி, “நான் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு அறிவிக்க இது ஒரு சிறந்த நேரம். நான் நன்றி சொல்லிவிட்டு இப்போது கூட சென்றுவிடலாம். ஆனால் எனக்கு இன்னும் ஒரு சீசன் விளையாட வேண்டும் என்பது போல உள்ளது. அடுத்த சீசனுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. அந்த 9 மாதங்களில் எனது ஃபிட்னஸ் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைத்தால் நான் மீண்டும் விளையாடுவேன். குஜராத்தில் நான் விளையாடிய இந்த போட்டி எனக்கு சென்னையில் இருப்பது போல உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற்றப்போவதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தோனியின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.