இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும். இது ஒரு தொடக்கம் தான் என ஆஸ்கர் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இன்று காலை நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மேடையில் பாடப்பட்டது. அப்போது அந்த அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. மேலும் நடன கலைஞர்கள் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது போல் ஆடைகள் அணிந்தும், அதேபோன்ற நடனத்தையும் வெளிப்படுத்தினர்.
ஆஸ்கர் வெற்றிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் என்டிஆர், என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இது ஆர்ஆர்ஆர் படத்திற்கான வெற்றி மட்டுமல்ல. இந்திய தேசத்திற்கான வெற்றி. இது தொடக்கம்தான். இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும் என்பது இந்த வெற்றியின் மூலம் தெரியவந்துள்ளது.
இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸுக்கு வாழ்த்துகள். இயக்குநர் ராஜமௌலி மற்றும் மக்களின் அன்பும், ஆதரவும் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது என்று ஜூனியர் என்டிஆர் கூறினார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.