தான் நடத்துவது அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்பதற்கான தர்ம யுத்தம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா மற்றும் புரட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரட்டை இலை சின்னத்தை காட்டியபடி நிகழ்ச்சி மேடைக்கு நடந்து வந்த ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படத்திற்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், “திருச்சியை இங்குள்ள தொண்டர்கள் அரை அடிக்கு அழுத்தி விட்டீர்கள். 1956ல் அறிஞர் அண்ணா மாநாடு நடத்திய போது நான் வந்தேன். இன்று 86 வயதில் இளைஞானாக நிற்கிறேன். மூன்று முறை முதல்வர் பதவி கொடுத்த போது, மூன்று முறையும் திருப்பிக் கொடுத்தவர் ஓபிஎஸ். வரங்கொடுத்தவரையே அழிக்க துடித்த கதை உண்டு. அது தான் நியாபகம் வருகிறது. பெரும்பான்மையை சிறுபான்மை வெல்லும் என்பதுதான் பாரதப் போர். சிறுபான்மையாக உள்ளோம் என்பதால் எளிதாக எண்ண வேண்டாம்” என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், 1.போலி பொதுக்குழு மூலம் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடுக்கப்பட்ட முடிவை நிராகரிக்கிறோம், 2.இபிஎஸ் இடம் உள்ள பொதுக்குழு கலைக்கப்பட வேண்டும், 3.நேர்மையான பொதுக் குழுவை உருவாக்க வேண்டும், 4.ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர், மற்றும் 5.பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட இபிஎஸ், மற்ற பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள இன்னும் சிலர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நமது இயக்கம் ஒரு சாதாரண இயக்கம் அல்ல. எவராலும் அழிக்க முடியாத அற்புத சக்தி நம் இயக்கம். வீழ்வது நாம் ஆகினும், வளர்வது நம் இயக்கமாக இருக்கட்டும். இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை தொண்டர்களுக்கு மட்டுமே உள்ளது என்று எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதை ஜெயலலிதா பின்தொடர்ந்தார். இதுதான் வரலாறு.
அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று உண்மையான பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் நம்பிக்கை துரோகிகள் இதனை மாற்ற முயற்சிக்கின்றனர். தொண்டனை தலைமைப் பதவிக்கு கொண்டு வரும் தலையாய கடமை எங்களுக்கு உள்ளது. 2 கோடியாக இருந்த கட்சியின் நிதி, இன்று 250 கோடியாக மாறியது. கட்சியின் நிதியை முறையாக செலவு செய்யாதவர்கள் மீது தண்டனை பெற்றுத் தரப்படும்.
திருச்சியில் கடல் இல்லை என்ற குறை இருந்தது. ஆனால் அலைகடலென திரண்டு வந்து , அந்த குறையையும் நீங்கள் நீக்கிவிடீர்கள். ஜெயலலிதா இங்கு கூட்டம் நடத்திதான் முதலமைச்சராக ஆனார். நாம் நடத்துவது தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம். உங்களின் வலிமையோடு, திருச்சி மாநகரில் விதையை உருவாக்கி உள்ளோம். இது பூ பூத்து, காய் காய்த்து, மீண்டும் தொண்டர்களிடமே கொடுக்க வேண்டும். வருகின்ற காலம், தொண்டர்களின் காலமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.







