தமிழ்நாட்டிலேயே அதிக கல்வி கடன் பெற்ற மாவட்டமாக தற்போது மதுரை விளங்குகிறது என நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில், நியூஸ்7 தமிழ் சார்பாக கல்விக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக மதுரை காந்தி மியூசியத்தில் உயர் கல்விக்கு வழிகாட்டும் மாபெரும் கல்வி கண்காட்சி பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் இன்று துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனையும் படியுங்கள்: மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கிய நியூஸ் 7 தமிழின் ”கல்வி கண்காட்சி”
இதனை தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கல்வி கண்காட்சியில் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்ததாவது..
”கல்வி கண்காட்சியை மதுரையில் திட்டமிட்டு நடத்துவதற்காக நியூஸ் 7 தமிழுக்கும் அதன் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மலுக்கும் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல விஷயங்களை செய்யும் பொழுது தான் துணிச்சல் எவ்வளவு தேவை என்று தெரியும்.
கடந்த காலங்களில் இந்தியாவிலேயே அதிக கல்வி கடன் கொடுக்கும் மாநிலம் மகாராஷ்டிரா குறிப்பாக மும்பையில் அதிக கடன் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே அதிக கல்வி கடன் பெற்ற மாவட்டமாக தற்போது மதுரை விளங்குகிறது. 119 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கல்வி கடன் கொடுப்பது 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 6 மாநிலங்களில் வழங்கப்பட்ட கல்விக் கடனில் கூட்டுத்தொகையை விட மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கல்விக் கடன் அதிகம். தேவைப்படும் போது கிடைக்கக்கூடிய கடனை விட அதிசயம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
இதுவே இந்த உலகின் 7-வது அதிசயம். 85 முதல் 90% சதவீதம் தேசிய மைய வங்கிகள் கடன் கொடுத்துள்ளது. தொடர் முயற்சியின் காரணமாக தற்போது தனியார் வங்கிகளும் அதிக அளவு கடன் கொடுக்க கொடுக்கத் துவங்கியுள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
– யாழன்







