திருவாரூர் அருகே பழுதான மின்மீட்டரை பழுதுநீக்கம் செய்து தராததால் வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க, திருவாரூர்
நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் சேமங்கலம் அடுத்த நெடுங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது காலி மனையில் வீடு கட்ட மின் இணைப்பு வாங்கினார். ஆனால் அது சரியாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மின்வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் மின்வாரிய ஊழியர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அடியக்கமங்கலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் பணிபுரியும் இளநிலை பொறியாளருக்கு தபால் மூலம் புகார் அளித்துள்ளார். அதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து 2022-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, ராஜ்குமாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு 5 ஆயிரத்தையும், வழக்குச் செலவுக்காக 5 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
—ரெ.வீரம்மாதேவி







