திருப்பதி லட்டுவின் தரம் பற்றி பலமுறை முறையிட்டும் தேவஸ்தான நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என முன்னாள் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நேற்று லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும்
உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணதீட்சதலு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

”திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் நெய்வேத்திய பிரசாதங்கள், பக்தர்களுக்கு
வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகியவற்றின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது
என்று பலமுறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள்
கண்டு கொள்ளவில்லை.
ஆகம சாஸ்திரத்தில் கூறியுள்ளது போல் சரியான நேரத்தில் சரியான முறையில் இறைவனுக்கு நெய்வேத்தியம் நடைபெறவில்லை என்று தெரிவித்தோம். என்னுடைய போராட்டம் தனி மனித போராட்டமாக மாறிய காரணத்தால் பலன் கிடைக்கவில்லை. ஐந்து ஆண்டு காலம் மாமிச கொழுப்பு , மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதங்கள் தயார் செய்து மகா பாவம் செய்து விட்டார்கள்.

பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் தொடர்பாக ஆய்வகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற முடிவுகளை ஒரு ஆய்வாளர் என்ற முறையில் நானும் பார்த்தேன். அப்போது நெய்யில் மாமிசம் கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்துவிட்ட தவறுக்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்” என ரமணதீட்சதலு தெரிவித்துள்ளார்.







