கார்த்திகை திபத் திருநாள் அன்று மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ராமரவிக்குமார் உயர்நீதிமன்ர மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு நிறைவேற்றப்படாத நிலையில் அதிகாரிகள், காவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு, தனி நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மீண்டும் உறுதி செய்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
அப்போது அறநிலையத்துறை தரப்பில், “தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நடைமுறை முன்னர் இல்லை, தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு புதிய நடைமுறையை புகுத்தப் பார்க்கிறார்கள். நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தை எப்படி நீதிமன்ற உத்தரவின் மூலம் செயல்படுத்த முடியும்?, எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டது.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், “தற்போதைய நிலையில் எந்த ஒரு தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பின்பே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியன் சுவாமி கோயில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.




