மாணவர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது, மாறாகத் தோல்வியிலிருந்து வெளிவரத் தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வருங்கால தூண்களான மாணவர்களையும், அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளிகளின் நூற்றாண்டு விழா காணுகிறது, அதற்கு வாழ்த்துகளையும், மேன்மேலும் வளரவும் வாழ்த்துகிறேன் எனக் கூறிய அவர், இந்த பள்ளியில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மேலும், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி எனத் தெரிவித்த அவர், தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன், ஆனால் திருக்குறள் என்பது அதற்கு மேலானது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது எனத் தெரிவித்த அவர், தமிழ்நாடு ஆளுநராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது எனவும், அதில் பெரும்பாலானது ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக் குறிப்பிட்டார். மேலும், ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு தான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு எனப் பாராட்டினார்.
அண்மைச் செய்தி: ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்; செப்டம்பர் 15ம் தேதி தொடக்கம்?’
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிகப் பழமையானது எனப் பேசிய அவர், 3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் யோக கலையின் முக்கியத்துவத்தைத் தெரிவித்துள்ளனர் எனவும், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒரு சந்தையாகவும், கலாச்சாரம் இல்லாத நாடாகக் காட்ட முயன்றனர். ஆனால், இந்தியா அவ்வாறு இல்லை, இந்தியா கலாச்சாரம் நிறைந்த, பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது எனக் கூறினார். மேலும், மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும் எனத் தெரிவித்த அவர், மாணவர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. மாணவர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது, மாறாகத் தோல்வியிலிருந்து வெளிவரத் தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது எனக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர், பக்தி என்பதை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருக்குறளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.