மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வட்ட வழங்கல் பிரிவில் மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் இணையதளம் மூலம் மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பம் செய்வதற்கு நேரில் செல்லலாம்.
ஆதார் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) இவற்றுடன் புகைப்படம் மற்றும் செல்போன் எண் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
18 வயது பூர்த்தியான மூன்றாம் பாலினத்தவர்களில் ஒரு நபர் தனியே வசிக்கும்பட்சத்தில் ஒரு நபர் குடும்ப அட்டை வழங்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூகநல வாரியத்தால் விநியோகிக்கப்படும் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயமில்லை.
அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கொரோனா விதிகளுக்குட்பட்டு அரசு பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் சிறப்பு முகாமில் கிருமிநாசினி பயன்பாடு, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







