“கட்டுப்பாடா? என்ன கட்டுப்பாடு” – தீண்டாமை குறித்து நெஞ்சை அதிரவைத்த பிஞ்சுக்களின் கேள்வி எழுப்பியுள்ள குழந்தைகள், பள்ளிகளில் தங்களை தரையில் அமர வைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
உலகம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்தாலும், அண்டத்தையே படம் பிடித்து அனுப்பினாலும் கிராமங்கள் மட்டும் தனது சாதிய பிடிமானங்களில் இருந்து விடுபடவில்லை. சாதி இறுக்கம் நிறைந்ததாகவும், ஊர் கட்டுப்பாடு என்ற வடிவில் தீண்டாமை இன்னும் திணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. கல்வியறிவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பள்ளிக் குழந்தைகளிடமே நவீன தீண்டாமை அரங்கேற்றப்பட்ட அவலம் நிகழ்தேறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்புடைய வீடியோ – https://www.youtube.com/watch?v=Ms8UJ6KltQE
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் சாக்லேட் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றுள்ளனர். ஆனால் தின்பண்டங்கள் வழங்க முடியாது எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்புகிறார். ஏன் கொடுக்க முடியாது என பள்ளி சிறுவன் கேட்க, ”ஊரில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது” என அலட்சியமாக சொல்கிறார். சாதிய கொடூரங்கள் ஏதும் அறியாத அப்பிஞ்சு, “கட்டுப்பாடா? என்ன கட்டுப்பாடு” என்று கேட்கும் கேள்வி நம் நெஞ்சை அதிர வைக்கிறது.
இதுபற்றி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சம்பந்தப்பட்ட பள்ளி சிறுவர்கள், “நாங்கள் தினமும் அதே கடையில்தான் திண்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவோம். ஆனால், இப்போது ஊர் கூடி பேசி கட்டுப்பாடு விதித்துள்ளனர், அதனால் உங்கள் தெரு ஆட்களுக்கு திண்பண்டங்கள் தர முடியாது என திருப்பி அனுப்பிவிட்டார்.
தெருவுக்குள் நடக்கக் கூடாது எனச் சொல்கிறார்கள்” என் சொன்ன பிஞ்சு அடுத்து சொன்னது நம்மை உலுக்கச் செய்தது.
“பள்ளியில் சென்று சொன்னால் எங்களை அடிக்கிறார்கள். மற்ற சாதியைச் சேர்ந்த மாணவர்களை பெஞ்சில் அமரவைக்கிறார்கள். எங்களை தரையில் அமர வைக்கிறார்கள்” என்று ஏதுமறியாமல் கூறுகிறார்கள்.
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ள இந்த கொடூரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாய் எழுந்துள்ளன.
மேலும், இந்த வழக்கை 153a பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்கை, பேச்சு, எழுத்தால் வன்முறை தூண்டி, சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்துதல் போன்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், ஊர் நாட்டாமை தலைமறைவாகியுள்ளார். அந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்கிய சென்ற பெட்டி கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த கிராமத்தில் காவல்துறையினர் குவித்துள்ள நிலையில், 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி பால்பாண்டி