“அதிமுகவில் இருந்து கதவை உடைத்து கொண்டு பாஜகவுக்கு வருகின்றனர்” என அக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
செல்லாக் காசாக இருந்து வரும் ஆர்.பி. உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பணத்தை கொள்ளையடித்து ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகள், தாரக மந்திரம் எல்லாம் எனக்குத் தெரியாது. மீடியோ வெளிச்சத்திற்காக தன்னைப் பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
கடுமையான வார்த்தையும் எனக்கும் பயன்படுத்த தெரியும். மேலும் என்னை திட்டத்திட்ட பாஜகவும், நானும் சரியான பாதையில் செல்வதற்கான குறியீடாக எடுத்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை – அருமையாக அனைத்தும் கொடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய அரசு அளித்த ரூ.1,300 கோடியை செலவு செய்யவில்லை. தமிழக அரசு கேட்டுள்ள ரூ.38,000 கோடி வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும்.
எந்த மாநிலத்திற்கும் வெள்ள நிவாரண நிதியை அளிப்பதற்கு மத்திய அரசு குறை வைக்கவில்லை. தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்றால் 21% வாக்குகள் பெற முடியும். இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக்கணிப்பு 16 சதவீதம் வாக்குகள் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தனித்து நின்றால் பெற முடியும் என கூறியியுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து 30 சதவீதம் வாக்குகள் பெறும். தேர்தலில் 23 சதவீதம் வாக்குகள் வந்தாலே அவை சீட்டுகளாக மாறும் போது, 30 சதவீதம் வாக்குகள் பெற்றாலே வேட்பாளர்கள் வெல்ல முடியும் என அவர் கூறினார்.
மேலும், அதிமுக கதவுகள் மூடப்பட்டு இருப்பதாக ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் கதவை உடைத்து பாஜகவில் இணைந்துள்ளதாக அண்ணாமலை கூறினார். நாங்கள் கதவைத்தட்டி எங்கேயும் போக விரும்பவில்லை – அவர்களே கதவைத் திறந்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.







