டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது – நீதிபதி புகழேந்தி கருத்து!

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழல் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசே மது விற்பனை செய்கிறது. ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல்களை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல் குறித்து கருத்துக் கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தங்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என 3 மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மதுரை டாஸ்மாக்கில் நடக்கும் மாமூல் வசூல் குறித்து பேட்டி அளித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

மனுதாரர்கள் மதுரை மாவட்ட டாஸ்மாக்கில் பணிபுரிகின்றனர். மதுரை மாவட்ட டாஸ்மார்க் மேலாளராக பணியில் இருந்த ராஜேஸ்வரியும் திருமங்கலம் டாஸ்மார்க் மேற்பார்வையாளராக பணியில் இருந்த செல்வமும் இணைந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தினமும் 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள்.
இதனால் டாஸ்மார்க் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் புகார் அளித்தனர். புகாரில் நடவடிக்கை இல்லாததால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்துள்ள உத்தரவில்,

மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி ஊழியர் செல்வம் இணைந்து வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். இது குறித்தும் அவர்களின் உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனுதாரர்கள் அனுப்பி உள்ளார்கள். மேலும் மனுதாரர் ஊடகங்களுக்கு சென்று பேட்டி அளித்துள்ளனர். இது டாஸ்மார்க் விதிகளுக்கு எதிரானது என்றாலும் இதே நேரத்தில் மேலாளர் ராஜேஸ்வரி உடனடியாக அவர் பணிபுரிந்த துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது டாஸ்மார்க் நிறுவனத்தில் ஏதோ நடக்கின்றது.

கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் உயிரிழப்புகளை தடுக்க மதுபான விற்பனையில் அரசே ஈடுபட்டுள்ளது. இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்க கூடாது. ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
டாஸ்மார்க் துறை தன் தவறுகளை உணர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மனுதாரர்கள் மீது டாஸ்மாக் நிறுவன விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க அனுமதி உள்ளது என்றும் மனுதாரர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.