சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிறுபான்மை மதத்தவரின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து மேற்பார்வை செய்வதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், மத்திய வகஃப் கவுன்சில், ஆகியவற்றின் தலைவர்களையும்; சில நியமன உறுப்பினர்களையும் கொண்ட தேசிய அளவிலான குழு அமைப்பதற்கு மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா? என்றும்,
தேசிய சிறுபான்மையினர் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் சிறுபான்மையினருக்காக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மற்றும் மாநில அளவிலான அமைப்புகள் ஆகியவற்றின் நோடல் ஏஜென்சியாக மாவட்ட அளவில் செயல்படுவதற்கு அதிகாரிகள் மற்றும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்ட சிறுபான்மையினர் நல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த பரிந்துரையின் தற்போதைய நிலை என்ன? என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 30ல் கூறப்பட்டுள்ளவற்றைச் செயல்படுத்துவதற்காக சட்டம் ஒன்றை இயற்றுவது குறித்து அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்றும் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், “சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தற்போது பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறுபான்மையினர் நலனுக்காக குழுவொன்றை அமைக்க வழிவகுத்துள்ளது. தலைமைச் செயலாளர் அதன் தலைவராக இருப்பார். ஒவ்வொரு துறைகளின் தலைவர்களும் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். தன்னார்வ அரசு சாரா அமைப்புகளிலிருந்து மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள், மேலும் அரசு பொருத்தமானவர்கள் என கருதும் மூன்று உறுப்பினர்களையும் நியமித்துக் கொள்ளலாம். அதுபோல மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதே போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்யும். இவைகளை தவிர தேசிய அளவில் குழு எதையும் அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை.” என கூறியுள்ளார்
அதேபோல கடந்த 2004ம் ஆண்டு தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் ஒன்றை அமைப்பதற்காக சட்டத்தை அரசு இயற்றியது. அதன்மூலம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் குறித்த பிரச்சனைகள் கையாளப்படுகின்றன எனவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.







