”தமிழில் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது” – எம்பி கனிமொழி பேச்சு

தமிழில் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு நடந்த…

தமிழில் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின்போது எடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.

இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுடப்படாத மண் செங்கல், நான்கு தரைத்தளங்கள், சுடுமண் குழாய்கள், அடுப்பு, பானை ஓடுகள், பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், உடைந்த வளையல்கள், இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டார். மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், கள ஆய்வாளர் எத்திஸ்ராஜ் ஆகியோர் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தனர். பின்னர் அருகில் இருந்த சேர சோழ பாண்டிஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள அகரத்தில் தாமிரபரணி நதிக்கரை ஓரம் வாழ்விடம் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகளை கனிமொழி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்திய பேசிய எம்.பி கனிமொழி, ”மிக மூத்த குடி தமிழ்க்குடி. இதுதான் தமிழ் மக்களின் பெருமை. தமிழில் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட நமது தமிழ் மொழி இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் பல மொழிகள் காணாமல் போய்விட்டது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.