காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த அரசு மருத்துவமனை செவிலியர் கொலை வழக்கு, திடுக்கிடும் உண்மைகளால் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
தேனி மாவட்டம், பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனது வீட்டில், ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார் செவிலியர் செல்வி. இந்த குற்றத்தை துப்பு துலக்கக் களமிறங்கியபோது, கிடைத்த தகவல்கள் போலீசாரைத் தலைச்சுற்ற செய்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொலை செய்யப்பட்ட செல்வியின் வீட்டில் ஆதாரங்களைச் சேகரித்து முதலில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். செல்வியின் தொலைபேசியில் இருந்த 300க்கும் மேற்பட்ட எண்களை வைத்து, பல்வேறு முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்கள் என அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இதனையடுத்து கடந்த 9-ம் தேதி கம்பம் அரசு மருத்துவமனை ஊழியரான ராமச்சந்திர பிரபு என்பவரை இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்தனர். இதற்கு அடுத்தநாளே உத்தமபாளையம் அருகே ஊத்துக்காடு பகுதியில் ராமச்சந்திர பிரபு விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் போலீசாருக்கு ராமச்சந்திர பிரபு மீது சந்தேகம் எழுந்தது.
பின்பு ராமச்சந்திரபிரபுவும், செல்வியும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றியபோது பழக்கமாகி இருந்ததும், இருவரும் பணி மாறுதல் பெற்றுச் சென்ற பிறகும் தொடர்ந்து நேரில் சந்தித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செல்வி கொலைச் சம்பவம் நடைபெற்ற அன்று, பிற்பகல் 1.45 மணியளவில் ராமச்சந்திர பிரபு செல்வியின் வீட்டிற்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதை வைத்து ராமச்சந்திர பிரபுவின் தொடர் நடவடிக்கைகளைக் கண்காணித்த போலீசார், கோடாங்கிப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், சம்பவம் நடந்த பகுதியில் ராமச்சந்திர பிரபு நடமாடியதற்கான அனைத்து சிசிடிவி ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து செல்வியைக் கொலை செய்தது ராமச்சந்திர பிரபு தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
செல்வி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தரையிலிருந்த ரத்தத்தில் பதிவான கால் தடமும் ராமச்சந்திர பிரபுவின் கால் தடம்தான் என்பது தடய அறிவியல் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போலீசாரை தலை சுற்ற வைத்த இந்த வழக்கு விசாரணை ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது.