ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் தீப்பெட்டி கணேசன் என்ற கார்த்திக் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
ரேனிகுண்டா, மேற்கு தொடர்ச்சி மலை, பில்லா 2, கண்ணே கலைமானே, கோலமாவும் கோகிலா, வேட்டை மன்னன், உஸ்தப் ஹோட்டல், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கார்த்திக். இவரை அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்றே அழைக்கின்றனர். இவர் மாரடைப்பால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்
சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்பு கே.கே நகரில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் வறுமையில் இருப்பதாகவும், தன்னைப்பற்றிய நிலைமை நடிகர் அஜித்துக்கு தெரிய வந்தால், தனக்கு உதவுவார் என்றும் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி உன்னதமான மனிதர் என்றும் கடினமான தருணங்களில் தனக்கு அவர் உதவி செய்தார் என்றும் தெரிவித்தார். மேலும் இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இவரது திடீர் மரணம் திரைத்துறையினரைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு இயக்குநர் சீனுராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட ட்வீட்டில் ‘எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்பு நிறை இதய அஞ்சலி கணேசா..” என்று பதிவிட்டுள்ளார்.







