ராஜஸ்தான் மாநிலத்தில், தானியக் கிடங்கில் தவறுதலாக மாட்டிக்கொண்ட 5 சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின், ஹிமட்சார் என்ற கிராமத்தில் சிவராம் (7), ரவீனா (5), ராதா (5), பூனம்(8), மலி என்ற சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக அருகில் இருக்கும் தானியச் சேமிப்பு கிடங்கில் குதித்து விளையாடி உள்ளனர். அப்போது கிடங்கின் கதவுகள் மூடிக்கொண்டதால் சிறுவர்கள் அந்தக் கிடங்கில் சிக்கிக்கொண்டனர்.
கிடங்கிலிருந்து வெளியேற சிறுவர்கள் வெகு நேரம் முயற்சி செய்தனர். தங்களைக் காப்பாற்றுமாறு அச்சிறுவர்கள் சத்தமிட்டபோதும், அருகில் இருக்கும் யாருக்கும் அது கேட்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறுவர்களின் தாய் வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அவர்களைத் தேடியுள்ளார். அப்போது, கிடங்கினுள் அவர்கள் மயங்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அச்சிறுவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வரும் வழியிலேயே சிறுவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால், அவர்களது உடல்கள் உடல்கூறாய்விற்கு அனுப்பப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







