புதுச்சேரியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி முதல் திரையங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் அலை தற்போது குறைந்ததை அடுத்து மாநில அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வருகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதி அளித்தது.
ஆனால் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 1ஆம் தேதி திறக்கப்படவிருந்த திரையரங்குகள் இன்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டு காட்சிகள் திரையிடப்பட்டன. நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோதிலும், புதிய படங்கள் ஏதும் இல்லாததால் ஆங்கிலம், பிறமொழி டப்பிங்க் மற்றும் பழைய படங்களையே திரையரங்குகள் திரையிட்டுள்ளன. இதனால் அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.








