சாலையில் திடீரென மயங்கிய மனைவியை தாங்கியபடி கணவன் பதறிய நிலையில், அந்த பெண்ணுக்கு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருச்சி சென்று கொண்டிருந்தார். அப்போது மாத்தூர் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே சென்று கொண்டிருந்த போது கணவர் ஒருவர் தன் மனைவியை மடியில் படுக்க வைத்து அழுது கொண்டிருந்தார்.
இதனை கண்ட விஜயபாஸ்கர் உடனே வாகனத்தில் இருந்து இறங்கினார். அப்போது பேச்சு மூச்சில்லாமல் கிடந்த அந்த பெண்ணின் கால் கைகளை நன்றாக தேய்த்து விட்டார். பின்னர் தண்ணீர் தாகமெடுத்து தண்ணியின்றி நெடுஞ்சாலையில் மயங்கி கிடந்த அந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்தார். மேலும் அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்து, செலவிற்கு பணம் கொடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அவர்களிடம் விசாரித்த போது கணவர் மனைவி இருவரும் கூலி வேலை செய்ய திருச்சி சென்று, பின்னர் சொந்த ஊரான கீரனூர் அருகேயுள்ள சவேரியார்பட்டினம் திரும்பியதாக கூறினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது லைரலாக பரவி வருகிறது.







