காற்றத்தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருவதால், சென்னை உட்பட 4 மாவட்டங் களில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த மழை காரணமாக, சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால், பல்வேறு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு, மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.








