பிரேதப்பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், விக்னேஷ் மரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் 13 இடங்களில் காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தலையில் பலத்த காயம் இருந்தது தெரியவந்துள்ளது என்று தெரிவித்த அவர், முதலமைச்சரின் தகவலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களும் முரண்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். மேலும், இந்த வழக்கு முறையாக நடைபெற சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் அனைத்து நடவடிக்கையையும் அரசு முறையாக மேற்கொண்டு வருவதாகவும், விக்னேஷ் மரண வழக்கு இன்று கொலைவழக்காக மாற்றப்பட்டு, காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித்தலைவர், விக்னேஷ் மரண வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்காததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்வதாகவும் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திருப்பூர், ஈரோட்டில் முதியவர்கள் மீதான தாக்குதல், கொலை சம்பவம், கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. என்று தெரிவித்த அவர், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








