வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மாவட்ட அளவில் மிகவும் புகழ் பெற்றது.
வேலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய தேர்களில் கருப்புலீஸ்வரர் தேரும் ஒன்று.
சுமார் 42 அடி உயரம் கொண்ட இந்த தேர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மாலை வரை கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர்- சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேர் நிலை வரை பக்தர்களுடன் கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும்,
தீபாராதனையும் நடைபெற்றது.
42 அடி உயரமும் பல டன் எடை கொண்ட இந்த தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் மாவிளக்கு கொண்டுவந்து தீபாராதனை செய்தனர், நேர்த்தி கடனுக்காக மிளகு மற்றும் உப்பு தேரின் மீது வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
—–ரெ.வீரம்மாதேவி
நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம்!-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.