தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்ட அனைத்து மகளிர் அரசு இலவச பேருந்தில் இதுவரை பயணம் செய்தோரின் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக பெண்களுக்கான இலவச பேருந்து அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
அண்மையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஓசி பேருந்து என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பெண்கள் சிலர் பேருந்தில் கட்டணம் செலுத்திதான் பயணம் செய்வேன் என கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் 07.05.2021 முதல் 05.10.22 வரை மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்தோர் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. மகளிர் 176 கோடியே 84 லட்சம் பேரும், திருநங்கைகள் 10.01 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 129.10 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் அவர் தம் உடன்துணையர் 6.55 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.
102 கோடியே 83 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். இதுவரை நகரம் முழுவதும் 281 கோடியே 14 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் மகளிர் பயணம் செய்வதாகவும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.







