தங்களது நாட்டின் மீது இந்தியா ஏவுகனை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில் இருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் மியான் நகரத்திற்கு அருகே கடந்த 9ம் தேதி இந்தியாவால் ஏவப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை விழுந்துள்ளது. இந்த ஏவுகணையானது ஒலியை விட மூன்று மடங்கு வேகத்திலும் சென்று தாக்கும் திறன் வாய்ந்தது. பாகிஸ்தான் அரசு ஏவுகணை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விபத்தின்போது உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், வழக்கமான பரிசோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக பாகிஸ்தான் பகுதியில் ஏவுகனை விழுந்ததாக விளக்கமளித்ததுடன் இந்த விபத்து குறித்து உயர்கட்ட விசாரணைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற அலட்சியமான செயல்களை விரும்பவில்லை என்றும் பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பகிரங்கமாக தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்தியாவின், ஏவுகனை சோதனை தளமானது கிழக்குக் கடற்கரை அல்லது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருக்கும். அவை எல்லைப் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.