ரஜினியை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குநர் நெல்சனுக்கும், ரஜினிக்கும் முக்கியமான படமாக இது இருக்கும், இருவருமே வெற்றிப்படம் தரவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் பலரின் கவனத்தைப் பெற்றார். அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியாக போகவில்லை. அதேபோல் ரஜினியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார், அண்ணாத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.இப்படிப்பட்ட ஒரு அழுத்தமான சூழலில்தான் நெல்சனும் ரஜினியும் கைகோர்த்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான தகவலின்படி ஜெயிலர் படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனவும், படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், தமன்னா, மற்றும் ரம்யாகிருஷ்ணன் உட்பட மொத்தம் 4 கதாநாயகிகள் என கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) பூஜையுடன் தொடங்கியது. படக்குழு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வரும் காலங்களில் படத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள், சிங்கிள் ட்ராக், டீசர் குறித்த தவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்