எதிர்க்கட்சிகளின் 2-ம் சுற்று ஆலோசனை ஜூலையில் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு!

எதிர்க்கட்சிகளின் இரண்டாம் சுற்று ஆலோசனைக்கூட்டம் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12-ஆம் தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன.…

எதிர்க்கட்சிகளின் இரண்டாம் சுற்று ஆலோசனைக்கூட்டம் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12-ஆம் தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் பாஜக தீவிரம் காட்டும் நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முக்கிய ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று நடத்தினார். எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.

பாட்னாவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹோமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் முதல் சுற்று ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிலையில் இரண்டாவது சுற்று ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12-ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.