மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தன் சிவிர்’ இரண்டாம் நாள் மாநாடு தொடர்பாக டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் முண்டுகா பகுதியில் நேற்று நடந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார். சிந்தன் சிவிர் கூட்டத்தில் நேற்று கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் ஆலோசனை நடத்தியதாகவும், இன்று மற்றும் நாளையும் ஆலோசனை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாட்டில் வேலையின்மை விகிதம் 7.88% ஆக உயர்ந்துள்ளதாக சாடிய ப.சிதம்பரம், மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பொருளாதாரம், விவசாயம், விவசாயிகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆலோசிக்க உள்ளது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார். பொருளாதார கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு உயர்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
160 நாடுகள் கொண்ட பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இவை தவிர ஊட்ட சத்து குறைபாடு இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிகம் உள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை என்பது அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், விவசாயிகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்ய வேண்டும். கோதுமை கொள்முதல் செய்வதில் மத்திய அரசு தவறி விட்டது என்றும் சாடினார். அப்படி செய்யாமல் இருந்து இருந்தால் இப்போது கோதுமை ஏற்றுமதி செய்வதற்க்கு தடைவிதிக்கமல் இருந்து இருக்கலாம் என்றும் கேள்வி எழுப்பினார்.
78,704 கோடி ரூபாய் மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகை உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார கொள்கையில் மாற்றம் தொடர்பாக ஆலோசனை கொடுத்தாலும் அவர்கள் அதனை ஏற்று கொள்வார்கள் என நம்புகிறீர்களா? மக்கள் சொல்வதையே கேட்க மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் அனைவரின் ஆலோசனைக்கும் வரவேற்பு அளிக்கும் என்றார்.
2019ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் மத்திய அரசின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்படும் என தெரிவித்து இருந்தார்கள், ஆனால் உண்மையில் 2019ம் ஆண்டில் இருந்ததை விட 2022ம் ஆண்டில் ரயில்வே, துணை ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கான காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ளதாகவும், இதனால் நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.