என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் பெரும் கலவரமாக மாறியது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில், என்.எல்.சி.யின் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாட்டை விட்டு என்.எல்.சி வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்கள் வருகை தந்து கலந்து கொண்டனர்.
அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர், என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக புறப்பட்டனர். அப்போது என்.எல்.சி. நுழைவுவாயில் நோக்கி புறப்பட்ட பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயற்சித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மீது பாமகவினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அப்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தாக்குதலை நடத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களமாக காட்சியளித்தது. இதனிடையே, கலவரம் நடைபெற்ற இடத்தை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பார்வையிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா









