இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் வந்த போரிஸ் ஜான்சனுக்கு அரசு தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். அப்போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ள போரிஸ் ஜான்சன், இருநாடுகள் இடையேயான முக்கிய தொழில்களில், பெரிய முதலீடுகளை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தை பார்வையிட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுள்ளது.
இதனை அடுத்து இன்று மாலை டெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அந்த சந்திப்பில் உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைச் செய்தி: தமிழ்நாடு முழுவதும் நேற்று மின்வெட்டு – பொதுமக்கள் புகார்
மேலும், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








