ஆந்திராவில் மலை உச்சியில் பூஜை செய்த பூசாரி, கால் இடறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கமலா என்ற மலையின் உச்சியில் அப்பகுதி மக்கள், தங்கள் பாரம்பரியப்படி வழக்கமான பூஜையில் ஈடுபட்டனர். அப்போது, பூசாரி பாப்பையா என்பவர், அருள் வந்து சாமியாடினார். அவர் ஆவேசமாக மலை ஊச்சிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக கால் இடறியது.
இதனால் கீழே விழுந்த அவர், பாறைகளில் மோதி பலமுறை உருண்டு விழுந்தார். பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து மலைக்கு கீழே விழுந்து கிடந்த அவரை ஓடிவந்து தூக்கினர். ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இதை நேரில் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பூசாரி மலையில் இருந்து கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.









