விருதுநகரில் பெண் காவலரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த பானுப்பிரியா தனது கணவர் விக்னேஷ் மற்றும் இரண்டு மகன்களுடன் சூலக்கரை பகுதியில் வசித்து வந்தார். அரசுப் பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் விக்னேஷுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று இரவு குடித்துவிட்டு வந்த விக்னேஷ் மீண்டும் குடிப்பதற்கு பணம் வேண்டும் என பானுப்பிரியாவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பணம் தருவதற்கு பானுப்பிரியா மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த விக்னேஷ், காவலர்கள் அணியும் பெல்டால் கழுத்தை நெறித்துள்ளார். இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பானுப்பிரியா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விக்னேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







