ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், அந்த இளைஞர் போக்குவர்த்து காவலரின் கையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விதிமீறல்களை குறைக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும் முக்கியமான சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்படுவது வழக்கம். முக்கியமாக, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காகவே சமீப காலமாக அதிகளவில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுப்படுகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வழக்கமான வாகன சோதனையில் ஈட்டுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த இளைஞரை விதிமீறல் தொடர்பாக போலீசார், புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர் போலீசாரின் கையை பிடித்துக் கடித்துள்ளார். இதனையடுத்து பணியில் இருந்த போக்குவரத்து காவலரைத் தாக்கியது, பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அந்த இளைஞரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








