நாகதோஷம் இருப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு நாகதோஷம் இருப்பதாக கூறி வெளாத்துகோட்டையில் உள்ள கோயில் ஒன்றுக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரவு தங்கியிருந்த மாணவி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கில் உள்ள மர்மங்கள் குறித்து தெரியவருதற்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் மாணவி கோயிலுக்கு சென்றபோது, கோயில் சாமியார் முனுசாமி திட்டமிட்டு அந்த மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் நாகதோஷசத்தை தீர்த்து வைப்பதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது. இதனாலேயே, மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முனுசாமியை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நாகதோஷசம் இருப்பதாக கூறி சாமியார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்