இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைப் பிரிவுக்காக போர் புரிந்தவரை, கனடா நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து கௌரவப்படுத்தியது தொடர்பாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்தார்.
கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கடந்த வாரம் உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, இரண்டாம் உலகப் போரில் முதலாவது உக்ரைன் பிரிவு சாா்பாக போர் புரிந்த யரோஸ்லாவ் ஹுன்கா (98) என்பவரை அவையில் நாடாளுமன்றத் தலைவா் அந்தோனி ரோட்டா அறிமுகப்படுத்தினார்.
ஹுன்காவை போர் நாயகன் என்று ரோட்டா புகழாரம் சூட்டினார். அதையடுத்து அவை உறுப்பினர்கள் அனைவரும் எழந்து நின்று கரவொலி எழுப்பி ஹுன்காவை கௌரவித்தனர். ஆனால் போரின்போது நாஜிக்கள் உத்தரவின் கீழ் முதலாவது உக்ரைன் பிரிவு சண்டையிட்டது பின்னரே தெரியவந்தது. இதையடுத்து, நாடாளுமன்றத் தலைர் ரோட்டாவை விமர்சித்த எதிர்க்கட்சிகள், அவரை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.
இதனால் பெரும் சர்ச்சை எழுந்ததால், நாடாளுமன்றத் தலைவர் அந்தோனி ரோட்டாவை ராஜிநாமா செய்ய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, தனது பதவியை அந்தோனி ரோட்டா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
யரோஸ்லாவ் ஹுன்கா கௌரவிக்கப்பட்ட சம்பவம் கனடாவுக்கும், அதன் நாடாளுமன்றத்துக்கும் மிகப் பெரிய அவமானமாகும். அது தவறுதலாக நடைபெற்ற செயலாகும். அது அறியாமல் செய்யப்பட்ட தவறாக இருந்தாலும், அதற்காக அந்த அவையில் இருந்த அனைவரும் வருத்தம் தெரிவிக்கிறோம்.







