மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் : முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 20 வயது இளைஞனும் 17 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும்…

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 20 வயது இளைஞனும் 17 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது. இதுதொடர்பான வன்முறைகளில் 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை கடந்த 23-ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது. அப்போது ஜூலை மாதத்தில் காணாமல்போன மைதேயி சமூகத்தைச் சோந்த மாணவனும், மாணவியும் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட மாணவன், மாணவியின் உடல்களை மீட்டுத் தர வேண்டும் என்று அவர்களின் பெற்றோா்கோரிக்கை விடுத்துள்ளனர். இம்பாலில் வசிப்பவர்களான 20 வயது இளைஞனும், 17 வயது சிறுமியும் கடைசியாக ஜூலை 6ஆம் தேதி ஒன்றாகக் காணப்பட்டனர். காணாமல் போன இருவரும் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் மணிப்பூர் போலீஸார் தெரிவித்தனர்.

தப்பி ஓடும்போது, அவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு, ஜூலை 7 ஆம் தேதி குகி ஆதிக்கம் நிறைந்த பகுதியான லாம்டானில் இருந்தது மொபைல் சிக்னல் மூலம் தெரியவந்தது. பின்னர் அந்த மொபைல் போனில் புதிய சிம் கார்டு செருகப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது

இதனிடையே மாணவன்-மாணவி கொல்லப்பட்டதாகவும் அதற்கு நீதி கேட்டும், சக மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.
தடை உத்தரவுகளை மீறி, வியாழன் மாலை இம்பாலில் உள்ள முதல்வர் பிரேன் சிங்கின் மூதாதையர் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் அவர்கள் முதல்வர் வீட்டில் இருந்து 200-300 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டனர். பல்வேறு திசைகளில் இருந்தும் அந்த இடத்தில் கூட்டம் கூட முயன்றதால் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியதாயிற்று. மாலை சுமார் 9.15 மணியளவில், கூட்டம் கலைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே தெளபால் மாவட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பாஜக மண்டல அலுவலகத்துக்கு வன்முறை கும்பல் புதன் கிழமை தீவைத்தது. அதேபோல், ஒரு போலீஸ் வாகனத்துக்கும் தீவைத்த கும்பல், காவலரைத் தாக்கி, அவரிடமிருந்த ஆயுதத்தை பறித்துச் சென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.