நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்- நயினார் நாகேந்திரன்

தற்போது வரை அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறோமா என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு முடிவு செய்யும் என பாஜக எம்எல்ஏ நயினார்…

தற்போது வரை அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில்
திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறோமா என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு முடிவு செய்யும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்காகவும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருநெல்வேலி கால்வாய், கோடகன் கால்வாய் ஆகியவற்றை மேம்படுத்துவது கால்வாய்களில் லைனிங் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் திருநெல்வேலி கங்கைகொண்டானை அடுத்த ஆளவந்தான் குளம் முதல் ராஜபதி வரை எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மேய்ச்சல் நிலமாக இருக்கக் கூடிய 600 ஏக்கரை சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்கள் போராடி வரும் நிலையில் அவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கினார். தற்போது வரை அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம். பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்கிறோமா என்பது குறித்து எங்களது கட்சியின் பாராளுமன்ற குழு கூடி முடிவு செய்யும்.

சிவி சண்முகம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சு அவர்களின் சொந்த கருத்து. அதனை கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்று அவர் எவ்வாறு கூற முடியும்.

பாஜக மாநில தலைவரோடு மூத்த நிர்வாகிகள், தலைவர்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஏப்ரல் மாதம் மாநில தலைவர் அண்ணாமலை துவங்கக்கூடிய யாத்திரையில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.