“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நாளை மறுநாள் வெளியாக உள்ளது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை கூறுகிறது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் சங்பரிவார் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார் .
மேலும் வகுப்புவாத கருத்துகள் மற்றும் அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் திரைப்பட டிரெய்லர் “வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“வகுப்புவாதத்தின் விஷ விதைகளை விதைத்து” மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சங்பரிவார் முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். “படத்தின் ட்ரெய்லரில், கேரளாவில் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டதாக ஒரு புரளியைக் காண்பிக்கின்றனர். இந்த போலிக் கதை சங்பரிவாரின் பொய் தொழிற்சாலையின் விளைபொருள்” என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொய்கள் நிறைந்த, முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்தரித்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கக் கூடாது என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பினராயி விஜயன் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து, கேரளாவில் ஆளும் சிபிஐ(எம்)ன் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன், அதன் டிரெய்லரே மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது.
” தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தின் சர்ச்சையை ஏற்படுத்தும் 7 தகவல்களை இங்கே பார்க்கலாம்:
1. இத்திரைப்படம் கட்டாய மத மாற்றத்தை மையமாக வைத்து, கேரளாவில் சுமார் 32,000 பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், பயங்கரவாத குழு அதன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது பலர் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆளும் சிரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகிறது.
2. படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, “மோசமான வகையான வெறுப்புப் பேச்சு” மற்றும் “ஒலி காட்சிப் பிரச்சாரம்” ஆகியவற்றின் அடிப்படையில் அதன் வெளியீட்டைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
3. செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றம் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இப்படத்தில், “வெறுக்கத்தக்க பேச்சுக்கள் உள்ளன. இந்த படம் சான்றிதழ் பெற்றுள்ளது மற்றும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது”. அதனால் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.
4. கேரள முதல்வர் பினராயி விஜயன், இப்படத்தை சங்பரிவாரத்தின் “பிரசாரம்” என்று கூறி படத்தை தயாரித்தவர்களை கடுமையாக சாடினார்.
5. விமர்சனங்களைத் தொடர்ந்து, யூடியூபில் படத்தின் டீஸர் ஆரம்பத்தில் “கேரளாவில் உள்ள 32,000 பெண்களின் இதயத்தை உடைக்கும் கதை என்றும், “கேரளாவைச் சேர்ந்த மூன்று இளம் பெண்களின் உண்மைக் கதைகள்” எனவும் எழுதபப்ட்டது.
6. காங்கிரஸ் தலைவர் சசி தரூர், படத்தின் தயாரிப்பாளர்கள் மாநிலத்தின் யதார்த்தத்தை “மிகைப்படுத்தல்” மற்றும் “திரித்தல்” ஆகியவற்றில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கேரளாவில் 32,000 பெண்கள் கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகக் கூறப்பட்டதை நிரூபிப்பவர்களுக்கு ₹1 கோடி வழங்கப்படும் எனவும் சசி தரூர் தனது ட்வீட்டில் கூறியிருந்தார்.
7. படத்தின் இயக்குநர் சுடிதோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா ஆகியோர் ‘தி கேரளா ஸ்டோரி’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது தான் என்று கூறி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா