இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதிய இன்றைய போட்டியில் இந்திய அணி 212 ரன்களை குவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் மோதி தோல்வி அடைந்தது. மேலும் இதன் மூலம் இறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடிது.
ஆனால் போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய அணி அதிரடியாக விளையாடியது. முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலி ஜோடி நிலைத்து நின்றதால், அணியின் ஸ்கோர் அதிகரித்தது. பின்னர் கே கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்ததாக இறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களுடன் வெளியேறினார். ஆனால் மறுபுறம் விராட் கோலி தனது அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தினார்.
இதனால் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை எட்டியது. விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களை விளாசியதோடு களத்தில் தொடர்ந்தார். ரிஷப் பண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஆறுதல் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், சிங்கிள் மேன் ஆர்மியாக விராட் கோலி 122 ரன்களை எடுத்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சாளர் பரீத் அக்மத் 2 விக்கெட்டுகளை எடுத்து கொடுத்துள்ளார். இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த ஆப்கானிஸ்தான் பல்வேறு யூகங்களை செயல்படுத்தியும் 2 விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்