தஞ்சை டி. ஐ.ஜி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் திங்கட்கிழமை அன்று ஆளுநர் ஆர. என். ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் வருகையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் இந்திய மாணவர் சங்க நிர்வாகி அரவிந்சாமி கருப்பு சட்டை அணிந்து பட்டம் பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகத்தினுள் சென்றவர், ஆளுநருக்கு எதிராக போராடுவார் என்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அரவிந்சாமியை போலீசார் பட்டமளிப்பு விழா அரங்கிலிருந்து வெளியே அழைத்து ஒரு ரூமில் வைத்து, ஆளுநர் சென்ற பிறகு அரவிந்சாமிக்கு பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தனியே பட்டம் வழங்கினார். இதனை கண்டித்து இன்று இந்திய மாணவர் சங்கத்தினரும், ஜனநாயக மாணவர் சங்கத்தினரும் தஞ்சை சரக டி.ஐ.ஜி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
அப்போது காவல்துறையினர் தடுத்ததால், மாணவர்கள் தடையை மீறி உள்ளே செல்ல முயற்சித்தனர். இதனால் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.
—-அனகா காளமேகன்







