எல்லோருக்கும் ஏதோ ஒன்றின் மீது பற்று எப்போதும் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அது பிரமாண்டமாகவோ, ஆகச்சிறந்ததாகவோ, அழகு என சொல்லப்படும் பொது கற்பிதங்களை முழுமையாக கொண்டதன் மீதாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அந்த பற்று, அந்த அன்பு சின்ன சின்ன விசயங்களின் மீது கூட படர்ந்திருக்கலாம். அது எப்போதும் அவ்வாறுதான் இருந்து வந்திருக்கிறது.
அந்த வகையில் பிரமாண்டமில்லாத, அதிக பகட்டு இல்லாத கதாபாத்திரங்களை கொண்டே தனது யதார்த்த நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய திறமையான நடிகைகளில் அஞ்சலி எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆந்திராவில் பிறந்த இவர் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இத்திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார்
தொடர்ந்து 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்பட்டார். மேலும் பல கதாபாத்திரங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்,
லிசா, காண்பது பொய், நாடோடிகள் 2, பேரன்பு, மத கஜ ராஜா, தரமணி, பலூன், இறைவி, மாப்ள சிங்கம், சகலகலா வல்லவன் அப்பாடக்கர், வத்திகுச்சி, கலகலப்பு, அரவான், தம்பி வெட்டோத்தி சுந்தரம், எங்கேயும் எப்போதும் , மங்காத்தா, அங்காடித் தெரு, ஆயுதம் செய்வோம், கற்றது தமிழ், சேட்டை போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் அஞ்சலி.
இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் பிரலமான அஞ்சலியின் ஒரு வசனம் உண்டெனில் அது, “நெசமாதான் சொல்றியா” என்பதாகதான் இருக்கும்.
கடவுள்கள் எப்போதும் பிரமாண்டங்களில் இருப்பதில்லை, அவை சின்ன விசயங்களில்தான் இருக்கின்றன. சக மனிதன் மீதான காதலை அற்புதமாக திரையில் வெளிப்படுத்தும் கலைஞர்கள் பேரன்பின் கடவுளாகதான் நமக்கு தெரிகின்றனர்.
நடிகை அஞ்சலி பிறந்த தினம் இன்று
கட்டுரையாளர்: காயத்ரி