அதிமுக சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவதாக மக்கள் கருதுவதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரையும் ஒருங்கிணைப்பதே தமது பணி என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த சசிகலா, சென்னை திரும்பு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
“இந்த சுற்றுப்பயணம் மன நிறைவை தந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்வேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து தரப்பினரும் இணைவோம். இணைப்பு முயற்சி நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவினர் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது பணி.
பாஜக கூட்டணியிலே தொடர்கிறோம் என்று ஒபிஎஸ் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அது அவரது விருப்பம் என கூறினார். தன்னை சந்திக்க ஒபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் சந்திப்பு நடைபெறும் எனவும் சசிகலா குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி கைது குறித்த கேள்விக்கு , சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு முதலமைச்சர் மக்களுக்காக பேசாமல், தனிப்பட்ட நபருக்காக பேசுவது இதுவே முதல்முறை என்றும், உங்களிடம் தவறில்லை என்று நிரூபியுங்கள், மத்திய அரசை ஏன் குறை சொல்கிறீர்கள் என சசிகலா தெரிவித்தார்.








