சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த 10
மாதங்களுக்கு மேலாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை
சேதப்படுத்திய ‘கட்டையன்’ காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர்
பிடித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில்
பூதிக்காடு செங்காடு தொண்டூர் கடம்பூர் பேருந்து நிலையம் மூலக்கடம்பூர் ஆகிய
மலை கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த “கட்டையன்”
யானையை கடம்பூர் மலைப்பகுதி மக்கள் யானையைப் பிடித்து வேறு பகுதிக்குள்
கொண்டு செல்ல வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடம்பூர் மலைப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சத்தியமங்கலம் புலிகள்
காப்பகம் வனத்துறையினர் அந்த ‘கட்டையன்’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக ஓசூரில் இருந்து யானை மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் 21ம் தேதி முதல் கடம்பூர் மலைப்பகுதியில் கட்டையன் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ‘கட்டையன் ‘யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர்
முயற்சி செய்து வந்த நிலையில் நேற்று இரவு ஒசப்பாளையம் அருகில் பெலுமுகை என்ற
இடத்தில் ‘கட்டையன்’ யானை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
அதன் பின்னர் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் நான்கு மயக்க ஊசிகள் ‘கட்டையன்’ யானைக்கு செலுத்தப்பட்டது.சிறிது நேரத்தில் யானை மயக்கம் ஆனது. அதன் பிறகு
வனத்துறையினர் கிரேன் மூலம் ஹைட்ராலிக் ஆம்புலன்ஸில் ‘கட்டையன்’ யானையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டனர்.
பல மாதங்களாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி
வந்த கட்டையன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்ற
சம்பவம் கடம்பூர் மலைப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.