தூத்துக்குடியில் வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையை குடும்பத்தினரே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இத்தம்பதிக்கு பெனிஸ்கர் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். மகன் பெனிஸ்கர் சென்னையில் வசித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெனிஸ்கர் ஊருக்கு வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று காலை மகாராஜன் வீட்டில் தூங்கிய நிலையில் இறந்துகிடந்திருக்கிறார். இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் மகாராஜனின் உடலைக் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதலில் சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், மகாராஜனின் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்கள் இருந்துள்ளன. மேலும், மகாராஜனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவதுள்ளது. இதையடுத்து, பெனிஸ்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நான் சென்னையில் ஒரு கடையில் வேலை செய்து வந்தேன். அங்கு தரும் சம்பளம் போதுமானதாக இல்லை. ஏதாவது தொழில் தொடங்கலாம் என நினைத்து அப்பாவிடம் பணம் கேட்டபோது, பணம் தர மறுத்துவிட்டார். வீட்டை என் பெயருக்கு எழுதித் தாருங்கள், அந்தப் பத்திரத்தை பேங்கில் அடமானம் வைத்து லோன் வாங்கி தொழில் செய்து கொள்கிறேன் என கேட்டேன். அதற்கும் அவர் தர மறுத்து அவதூறாகப் பேசினார். அம்மா, தங்கையையும் அவதூறாகப் பேசினார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த நான் அவரின் கழுத்தை கை மற்றும் கயிற்றால் நெறித்தேன். அம்மா, தங்கை இருவரும் அவரின் கை, கால்களை பிடித்துக் கொண்டனர். வீட்டை எழுதித் தராததால் கொன்றோம் எனக் கூறியுள்ளார்
இதைத்தொடர்ந்து, பெனிஸ்கர், அவரது தாய் முருகம்மாள், தங்கை இசக்கிரேவதி ஆகியோரை போலீஸார் கைது செய்து கொலை வழக்காகப் பதிவு செய்தனர்.