இபிஎஸ் தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின்…

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழு தீர்மானங்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதிமுக பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு, செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு அதனை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. இது இபிஎஸ் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல திமுகவும் கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதனையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.