மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தந்த ஆட்சி திமுக ஆட்சி எனக் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர் பேரூராட்சியில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் சிறப்புரையாற்றினார். அதில், கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, இ-பட்டா என ரூ.44.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24.04.2022 அன்று பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் இன்று 131 பயனாளிகளுக்கு பட்டா மற்றும் உதவித்தொகையை வழங்கினோம். (1/2) pic.twitter.com/fbpdEFW4BB
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 13, 2022
தொடர்ந்து, லிங்கம் பட்டியில் மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு ரூ.3.57 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களைக் கனிமொழி எம்.பி. வழங்கினார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை வைத்து அழைக்கத் தொடங்கியது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனித்துறையைத் தொடங்கி முதலமைச்சர் நேர்ப்பார்வையில் வைத்துக் கொண்டதாகக் கூறினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தந்த ஆட்சி திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி வந்த பின்னர் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளைக் கேட்பதற்கும், நிறைவேற்றித் தருவதற்கும் இயலாத நிலையை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் எனக் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தங்க மாரியம்மாள் கல்லூரிக்குச் செல்ல பயன் பெறும் வகையில், இன்று அவருக்கு மூன்று சக்கர மின் வாகனம் வழங்கிய போது. (1/2) pic.twitter.com/1GZrfmUQcd
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 13, 2022
அண்மைச் செய்தி: ‘‘உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம்’ – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்’
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழியில் முதலமைச்சரின் நேரடி பார்வையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை வைத்துக்கொண்டு, உங்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இன்றைக்கு நிகழ்ச்சி பட்டா மட்டும் வழங்காமல் எந்த இடம் என்பதனை அருகில் வைத்துத் தான் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். யாருக்கு எந்த இடம் என்பதனையும் ஒதுக்கீடு செய்துள்ளார்கள், பட்டா வழங்குவது மட்டுமின்றி, வீடுகள் கட்டி தருவதற்கும், தொழிற்கூடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா.வின் சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் அவர் படித்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை ரூ.25 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாலாட்டின்புதூரில் மாற்றுத்திறனாளி தங்க மாரியம்மாளுக்கு இலவச 3 சக்கர மின் வாகனத்தை வழங்கினார். பின்னர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கி.ராஜநாராயணன் மணிமண்டப கட்டிடப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.