சென்னையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவின் நிறைவு நாளான இன்று உணவு பாதுகாப்பு துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தீவுத்திடலில் சிங்கார சென்னையில் உணவு திருவிழா என்ற 3 நாள் கண்காட்சி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்த 3 நாள் உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 வகையான தோசைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள், மசாலாக்கள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணெய் வகைகள், மீன் உணவுகள், சிறப்பு வாய்ந்த நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்வதற்காக அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற இந்த உணவு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், சிங்கார சென்னை உணவுத் திருவிழாவின் இறுதி நாளான இன்று உணவு பாதுகாப்பு துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நடந்து சென்றனர். மேலும், தாரை தப்பட்டைகள் முழுங்க அவர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.
– இரா.நம்பிராஜன்