கோவில்பட்டி அருகே வறுமையில் வாடும் மாற்று திறனாளி மாணவி குடுபத்தின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு வீடு வரை சாலை அமைத்து கொடுத்து உதவி செய்துள்ளார். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சித்தன்நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி நல்லமாடி. இருவரும் கூலி தொழிலாளர்கள். இந்த தம்பதியின் மகள் தங்கமாரியம்மாள். மாற்றுத்திறனாளியான இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு பயின்று வருகிறார். பெருமாள்சாமி வசித்து வரும் வீட்டிற்கு பல ஆண்டுகளாக சரியான சாலைவசதி இல்லமால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். அதிலும் மாற்றுதிறனாளியான தனது மகளை வைத்து கொண்டு சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் அருகில் உள்ள மெயின் சாலையும் சேதமடைந்து காணப்பட்டதால் பெருமாள்சாமி தம்பதியினர் தங்களது மகள் தங்கமாரியம்மாளை அரைகிலோ மீட்டர் வரை தூக்கி கொண்டு அதன்பின்னர் ஆட்டோவை வரவைத்து தான் எங்கும் வெளியில் அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து நிறைவேறாத நிலையில் கடந்த மாதம் 27ந்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்கமாரியம்மாள், தங்களது தெருவில் உள்ள சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சாலையை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து ஊராட்சி நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் மெயின் சாலையில் இருந்து பெருமாள்சாமி வீடு வரைக்கும் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சரியான சாலை வசதி இல்லமால் அவதிப்பட்டு வந்த தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது கோரிக்கை மனுவினை ஏற்று கனிவுடன் பரீசிலனை செய்து நடவடிக்கை எடுத்து பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினை தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களது குடும்பம் தற்போது வறுமையில் இருப்பதாகவும் தன்னை பெற்றோர்கள் படிக்க வைத்து கொண்டிருப்பதாகவும் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் இரண்டு கிலோ மீட்டருக்கும் வீட்டில் உள்ளதாகவும் எனவே பேருந்து நிலையம் செல்ல மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பைக் வழங்க வேண்டும் என்றும் இந்த மாணவி கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு தங்களது கோரிக்கையை பணிவுடன் ஏற்று தங்களது மகள் படிப்பிற்கு உதவும் மாறும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.







