சிவகாசி அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் வழக்கமாக எப்போதும் மாதத்தில் 5 மற்றும் 20-ம் தேதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நேற்று சுத்தம் செய்யப்படாத நிலையில் சுத்தம் செய்ய ஊழியர்கள் மேலே சென்ற போது, அங்கு தொட்டியின் உள்ளே அழுகிய நிலையில் நாயின் சடலம் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நாயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த 2 நாட்களாக தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்ததால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிவகாசி டிஎஸ்பி, வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்திய நிலையில், பொதுமக்கள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் தொட்டிக்குள் நாயை அடித்து போட்டது யார் என்ற கோணத்தில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் இச்சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா